தமிழ்நாடு

கல்லூரி மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு- போலீசார் தீவிர விசாரணை

Published On 2023-11-10 06:40 GMT   |   Update On 2023-11-10 06:40 GMT
  • வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
  • திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பயோ-கெமிஸ்ட்ரி முதலாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மெட்டாலா ஆனந்தாயி அம்மன் கோவில் காடு பகுதியைச் சேர்ந்தவர் செங்கோட்டு வேல் (44) விவசாயி. இவரது தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் இளம் பெண் உடல் ஒன்று தண்ணீரில் மிதந்தது.

இது பற்றி தகவல் கிடைத்ததும் ராசிபுரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் இறங்கி இளம் பெண்ணின் உடலை மீட்டனர். பிணமாக மீட்கப்பட்ட 20 வயது மதிக்கத்தக்க இந்த இளம் பெண் யார்? எந்த ஊர்? எப்படி இறந்தார்? போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.

இது பற்றி ஆயில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது பிணமாக கிடந்த பெண் சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவரது மகள் ஆசிகா (18) என்பது தெரியவந்தது. மேலும் இவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பயோ-கெமிஸ்ட்ரி முதலாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.

ஆனந்தாயி அம்மன் மாணவியின் குல தெய்வம் ஆகும். சம்பவத்தன்று தனியாக மாணவி கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டுள்ளார். இந்த காட்சி கோவில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.

இந்த நிலையில் தான் மாணவி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். எனவே மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது எப்படி இறந்தார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News