தமிழ்நாடு

சத்யதேவ் சட்ட அகாடெமி- நடிகர் சூர்யாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Published On 2023-07-16 16:16 GMT   |   Update On 2023-07-16 16:16 GMT
  • சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் இந்த அகாடெமி உருவாக்கப்பட்டுள்ளது.
  • ஜெய்பீம் திரைப்படத்திற்குப் பிறகும் தொடர்ந்து சமூக அக்கறையோடு செயல்பட்டுவரும் தம்பி சூர்யா

முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகியோர் இணைந்து சத்யதேவ் சட்ட அகாடெமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் இந்த அகாடெமி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சத்யதேவ் சட்ட அகாடெமியை உருவாக்கிய நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சமூகத்தில் கல்வியும் வேலைவாய்ப்பும் ஒரு சாராருக்கு மட்டுமே சொந்தமல்ல என்று போராடி சமூக நீதி அடிப்படையில் உரிமைகளைப் பெற்றோம். 1961ம் ஆண்டு வழக்கறிஞர் சட்டம் இயற்றப்பட்ட பிறகும், இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்ட பிறகுமே எளிய மக்களும் சட்டத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

எளிய பின்புலங்களில் இருந்து வரும் அவர்களது திறன்களை வளர்க்க, ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. சந்துரு அவர்களை இயக்குநராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்யதேவ் சட்ட அகாடெமியைத் தொடங்கி வைத்தேன்.

இதில், ஏழை - எளிய மக்களின் கல்விக்காக உள்ளார்ந்த அக்கறையோடு தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும் அன்புக்குரிய தம்பி சூர்யாவின் பங்களிப்பைப் பாராட்டுகிறேன்.

சட்டத்தொழிலும், மருத்துவத் தொழிலும் மற்ற தொழில்கள் போல் அல்ல. மற்றவை பணி புரிவது; இவை பயிற்சி செய்வது!

எனவே, நான் முதல்வன் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு இந்த அகாடமியின் மூலம் பயிற்சி அளிக்கக் கேட்டுக் கொண்டுள்ளேன்.

நீதியரசர் திரு.சந்துரு அவர்களோடு, ஜெய்பீம் திரைப்படத்திற்குப் பிறகும் தொடர்ந்து சமூக அக்கறையோடு செயல்பட்டுவரும் தம்பி சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோருக்கு மீண்டுமொருமுறை வாழ்த்துகள்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News