தமிழ்நாடு

தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டும் கேரள அரசை கண்டிக்க வேண்டும்- தமிழக அரசுக்கு பா.ஜனதா வலியுறுத்தல்

Published On 2022-12-05 09:16 GMT   |   Update On 2022-12-05 09:16 GMT
  • கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களின் வழியே தான் இந்த கழிவுகள் தமிழகத்தை சென்றடைகிறது.
  • கடமை தவறும் அனைத்து தமிழக அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசு மற்றும் முதலமைச்சரின் கடமை மற்றும் பொறுப்பு.

சென்னை:

பா.ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தூய்மையில் கேரளா முதலிடம் வகிப்பதாகவும், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அபராதம் விதிக்காத ஒரே மாநிலம் கேரளா என்றும், கழிவு மேலாண்மைத் துறையில் கேரளா குறிப்பிடத்தக்க தலையீடுகளை செய்துள்ளது என்றும் பசுமைத் தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது என்று பெருமையாக மார்தட்டி கொண்டு சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

ஆனால், மருத்துவ கழிவுகள், மின்னனு கழிவுகள் உள்ளிட்ட அனைத்து கழிவுகளையும் லாரிகளில் எடுத்து சென்று அண்டை மாநிலமான நம் தமிழகத்தின் எல்லையோர கிராமங்களில் குறிப்பாக நீர்நிலைகளில் கொட்டி 'கேரளாவின் குப்பைத் தொட்டியாக' தமிழகத்தை மாற்றி கொண்டிருக்கிறது என்பதே உண்மை. இதனால், சுற்றுப்புற சூழலுக்கு கேட்டை விளைவிப்பதோடு தமிழர்களின் உயிரோடு விளையாடி கொண்டிருக்கிறது கேரள அரசு இந்த ஆபத்தான விளையாட்டை அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது தமிழக அரசு.

கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களின் வழியே தான் இந்த கழிவுகள் தமிழகத்தை சென்றடைகிறது. ஆனால், இந்த மாவட்ட எல்லைகளில் அமைந்துள்ள உள்ள போக்குவரத்து மற்றும் காவல்துறை சோதனை சாவடிகளில் உள்ள அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பது தான் பிரச்சினையின் துவக்கம். மேலும், இந்த கழிவுகளை கொட்டி விட்டு சென்ற பிறகு இதை எரித்து அழிப்பது யார்? அந்தந்த ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் இந்த கழிவுகள் குறித்து ஏன் குரல் எழுப்புவதில்லை என்பது புரியாத மர்மமாகவே உள்ளது.

இனியும் அமைதி காக்காமல், தமிழகத்தின் சுற்றுப்புற சூழலை அழிக்கும் கேரள அரசை கண்டிப்பதோடு, கடமை தவறும் அனைத்து தமிழக அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசு மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடமை மற்றும் பொறுப்பு ஆகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News