புதிய பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை வரவேற்கிறேன்- கமல் டுவிட்டர் பதிவு
- நமது குடியரசின் வரலாற்றில் ஒரு முக்கிய நாள்.
- மசோதா மக்களவை மற்றும் மாநில சட்ட சபைக்கு மட்டுமே பொருந்தும்.
சென்னை:
புதிய பாராளுமன்றத்தில் நேற்று மகளிர் இடஒதுக்கீடு முதல் மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நமது குடியரசின் வரலாற்றில் ஒரு முக்கிய நாள். நமது பாராளுமன்ற இருக்கை புதிய வீட்டிற்கு மாறியுள்ளது. இந்த புதிய பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் மசோதா மகளிர் இட ஒதுக்கீடு மசோதா. இதனை நமது தேசத்தின் மிகப்பெரிய சிறுபான்மையினரான இந்திய பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட நீண்ட கால அநீதியை சரி செய்வதற்கு வழிவகுக்கும் என மகிழ்ச்சி அடைகிறேன். இதனை நான் முழு மனதுடன் பாராட்டுகிறேன். பாலின சமத்துவத்தை உறுதி செய்யும் நாடுகள் எப்போதும் செழிக்கும்.
இந்த மசோதா அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் எல்லை நிர்ணய நடவடிக்கைக்கு பிறகு தான் நடைமுறைக்கு வருகிறது.
இந்த மசோதா மக்களவை மற்றும் மாநில சட்ட சபைக்கு மட்டுமே பொருந்தும். மேல்சபை மற்றும் மாநில சட்ட கவுன்சில்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். எந்த ஒரு உறுதியான நடவடிக்கையின் உதவியும் இல்லாமல் சட்டமன்ற அமைப்புகளில் பெண்களுக்கு விகிதாசார பிரதிநிதித்துவம் கிடைக்கும் நாளை நான் எதிர் நோக்குகிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.