மின்கசிவு காரணமாக கோழி பண்ணையில் பயங்கர தீ விபத்து- 5 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் இறந்த பரிதாபம்
- தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.
- தீ விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்தோடு:
ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த மேட்டுநாசுவம் பாளையம், பச்சபாலி ஆண்டிகாடு தோட்டம் பகுதியில் முத்துச்சாமி (45) என்பவர் கோழி பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்த கோழிப்பண்ணையில் ஆயிரக்கணக்கான கோழிக்குஞ்சுகள் வளர்த்து வந்தார். இதற்காக தகர செட்டு கூரை அமைத்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை முத்துசாமி கோழி பண்ணைக்கு வந்து கோழிகளுக்கு தீவனம் வைத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதில் தகரசெட்டால் வேயப்பட்ட கூரைகள் தீப்பிடித்து முழுவதும் எரிந்தது.
இது குறித்து பவானிக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் 5 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் எரிந்து பரிதாபமாக இறந்தன.
இந்த விபத்தில் ரூ.18 லட்சம் மதிப்பிலான கோழி பண்ணை செட்டுகள், ரூ.5 லட்சம் மதிப்பிற்கான கோழிக்குஞ்சுகள் என மொத்தம் ரூ.23 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக உரிமையாளர் தெரிவித்தார்.
இந்த தீ விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.