தமிழ்நாடு

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை: 85 சதவீத கணக்கெடுப்பு பணி முடிந்துள்ளது- தமிழக நிதி அமைச்சர்

Published On 2022-12-31 14:09 GMT   |   Update On 2022-12-31 14:09 GMT
  • எதிர்க் கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியும், பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் இந்த விவகாரத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
  • 2023 பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை அறிவிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார்

சென்னை:

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வழங்கிய 505 வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு விட்டதாக தி.மு.க-வினர் கூறிவருகிறார்கள். ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட சில முக்கியமான வாக்குறுதிகளை தி.மு.க அரசு இன்னும் நிறைவேற்றவில்லை.

அதனால், தி.மு.க அரசுக்கு எதிரான விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட தரப்பினர் முன்வைத்து வருகிறார்கள். குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்கிற தி.மு.க-வின் வாக்குறுதி சட்டமன்றத் தேர்தலின்போது பெண் வாக்காளர்களைப் பெரிதாகக் கவர்ந்தது.

தி.மு.க வெற்றி பெற்றவுடன், ரூ.1,000 உரிமைத்தொகையை தமிழக அரசு வழங்கும் என்று குடும்பத் தலைவிகள் எதிர்பார்த்தனர். ஆனால், இதுவரை அது வழங்கப்படவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் இந்த விவகாரத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பிவருகின்றனர்.

இந்நிலையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மகளிருக்கு உரிமை தொகை தரும் திட்டம் தொடர்பான கணக்கெடுப்பு பணி 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 2023 பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை அறிவிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என கூறினார்.

Tags:    

Similar News