தமிழ்நாடு
சுபஉப்பலவாடி பகுதியில் அதிகம் காணப்பட்ட கடல் சீற்றம்

கடல் சீற்றம் அதிகரிப்பு- கடலூரில் 3 கிராமங்களில் கடல் நீர்புகும் அபாயம்

Published On 2022-05-17 07:58 GMT   |   Update On 2022-05-17 07:58 GMT
கடலூரில் சுபஉப்பலவாடி, நாணமேடு உள்ளிட்ட 3 கிராமங்களில் கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது. இதனால் மீனவ கிராம மக்கள் அச்சத்துடன் காணப்படுகிறது.
கடலூர்:

வங்க கடலில் உருவான அதானி புயல் சின்னம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதியில் கடலில் அதிக அளவு சீற்றம் காணப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் பரலாக மழை பெய்தது.

அதன்பின்னர் கடந்த 2 நாட்களாக மழை இல்லாததால் வெயில் வறுத்து எடுத்து வருகிறது. என்றாலும் கடலில் சீற்றம் குறையவில்லை.

தென்பெண்ணை ஆற்றின் முககத்துவாரமாக தாழங்குடா, சுப உப்பலவாடி, நாணமேடு கிராமங்கள் உள்ளது. இந்த கிராம பகுதியில் மழை காலங்களில்தான் அதிக அளவு தண்ணீர் வரத்து இருக்கும். அப்போது ஆற்று நீர் கிராமங்களை சூழந்து காணப்படும்.

ஆனால் தற்போது வழக்கத்துக்கு மாறாக கோடை காலத்தில் அதிகளவு கடல் சீற்றம் உள்ளது. குறிப்பாக சுபஉப்பலவாடி, தாழங்குடி, நாணமேடு பகுதியில் கடல் சீற்றம் அதிகம் உள்ளது. கடலில் எழும்பும் ராட்சத அலைகள் சுமார் 30 அடி தூரம் முன்னோக்கி வருகிறது.

பொதுவாக கடலில் மண் அரிப்பை தடுக்கும் வகையில் சவுக்கு மரங்கள் இந்த பகுதியில் நடப்பட்டு உள்ளது. ஆனால் கடல் சீற்றம் காரணமாக தண்ணீர் சவுக்கு தோப்பை தாண்டி முன்னேறி வருகிறது. இதனால் சவுக்கு மரங்கள் கீழே விழுந்த வண்ணம் உள்ளது.

தாழங்குடா மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் தற்போது தூண்டில் வளைவு அமைப்பதற்காக கற்கள் கொட்டப்பட்டு வருகிறது. இதுபோன்று சுபஉப்பலவாடி கடற்கரையில் எந்த தடுப்பும் இல்லை. எனவே சுபஉப்பலவாடி, நாணமேடு உள்ளிட்ட 3 கிராமங்களில் கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது. இதனால் மீனவ கிராம மக்கள் அச்சத்துடன் காணப்படுகிறது.

தாழங்குடா, சுபஉப்பலவாடி, நாணமேடு பகுதியில் பயறு வகைகள் அதிகளவில் பயிரிடப்பட்டு உள்ளது. கடல் சீற்றத்தால் தண்ணீர் இது போன்ற விளைநிலங்களில் புகுந்தால் நிலம் விவசாயத்துக்கு லாயக்கற்றதாகிவிடும்.

எனவே கடல் சீற்றம் காரணமாக விவசாயிகளும் கவலை அடைந்து உள்ளனர்.


Tags:    

Similar News