தமிழ்நாடு செய்திகள்
கடல் சீற்றத்துடன் உள்ளதையும், படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளதையும் காணலாம்

‘அசானி’ புயல் எதிரொலி- வேதாரண்யத்தில் 200 மீட்டர் தூரம் கரைக்கு பெருக்கெடுத்த கடல்நீர்

Published On 2022-05-11 11:21 IST   |   Update On 2022-05-11 11:21:00 IST
கடல் சீற்றமாக உள்ளதால் பைபர் படகில் சென்று மீன் பிடிக்கும் சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா ஆறுகாட்டுத்துறை, மணியன் தீவு, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் ஆகிய மீனவ கிராமங்களில் அசானி புயல் எதிரொலியால் கடும் சீற்றம் காரணமாக கடல்நீர் 100 முதல் 200 மீட்டர் வரை கரை உயர்ந்துள்ளது.

இதனால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். அசானி புயல் எச்சரிக்கையாக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்

இந்நிலையில் வேதாரண்யம் பகுதி கடற்கரையில் சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனால் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. நேற்று காலை லேசாக கடல் உள்வாங்கியது. இன்று திடீரென கடல் சீற்றம் காரணமாக கடல் நீர் பெருக்கெடுத்து சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு கடல் நீர் கரை உயர்ந்தது.

இதனால் மீனவர்கள் தங்கள் பைபர் படகுகளை ஒன்றோடு ஒன்று மோதாமல் இருக்க மேட்டுப்பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். கடல் சீற்றமாக உள்ளதால் பைபர் படகில் சென்று மீன் பிடிக்கும் சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இதனால் வலைகளைப் பழுது பார்க்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். கடல் சீற்றம் தணிந்து மீன்பிடிக்கச் செல்ல இன்னும் ஓரிரு நாள் ஆகும் என மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.

Similar News