தமிழ்நாடு செய்திகள்
வீராணம் ஏரி

வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு

Published On 2022-05-03 09:43 IST   |   Update On 2022-05-03 09:43:00 IST
தொடர்ந்து வெயில் அதிகரித்து வருவதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைய வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காட்டுமன்னார்கோவில்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அதோடு சென்னை மாநகர் மக்களின் தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த ஏரிக்கு பருவமழை மற்றும் மேட்டூர் அணை மூலம் நீர்வரத்து இருக்கும் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் வீராணம் ஏரி 3 முறை நிரம்பி வழிந்தது. இதனால் வீராணம் ஏரி பாசன பகுதியில் நெற்பயிர் சாகுபடி செய்து அறுவடை முடிந்து உள்ளது.

கடந்த சில நாட்களாக கோடை வெயில் வறுத்து எடுத்து வருகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. எனவே சென்னை மாநகருக்கு குடிநீர் அனுப்புவதின் அளவு குறைக்கப்பட்டது.

என்றாலும் சென்னைக்கு தொடர்ந்து குடிநீர் அனுப்பும் வகையில் கீழலணையில் இருந்து கூடுதல் தண்ணீர் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக ஏரியின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 42.20 அடியாக உள்ளது. வடலாறு வழியாக 224 கன அடி வருகிறது.

கடந்த மாதம் 30ந் தேதிவரை சென்னை மாநகர் குடிநீருக்காக 61 கனஅடி நீர் அனுப்பப்பட்டு வந்தது. தற்போது சென்னைக்கு குடிநீர் தேவை அதிகரித்து உள்ளது. எனவே கடந்த 3 நாட்களாக சென்னைக்கு 65 கன அடி நீர் அனுப்பப்படுகிறது.

தொடர்ந்து வெயில் வறுத்து எடுத்து வந்தால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைய வாய்ப்பு உள்ளது. எனவே சென்னைக்கு குடிநீர் அனுப்புவதின் அளவு குறைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Similar News