தமிழ்நாடு செய்திகள்
திருமணத்துக்கு வற்புறுத்தியதால் கள்ளக்காதலி மீது ஆசிட் வீசிய வாலிபருக்கு வலைவீச்சு
திருமணத்துக்கு வற்புறுத்தியதால் கள்ளக்காதலி மீது ஆசிட் வீசிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தேவகோட்டை:
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் முத்துராம லட்சுமி(வயது35). இவருக்கு திருமணமாகி விட்டது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரித்து தாயுடன் வசித்து வந்தார்.
முத்துராமலட்சுமி ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். தேனி மாவட்டத்தில் ஜவுளி வியாபாரம் செய்தபோது போடிநாயக்கனூரை சேர்ந்த செல்வம் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவருக்கு திருமணம் ஆகவில்லை.
செல்வமும் ஜவுளி வியாபாரம் செய்து வந்திருக்கிறார். இதனால் அவரும், முத்துராமலட்சுமியும் சேர்ந்து ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்துள்ளனர். இந்த நிலையில் அவர்களுக்கு இடையிலான பழக்கம் கள்ளக்காதலாக மாறி உள்ளது.
அவர்கள் இருவரும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு முத்து ராமலட்சுமி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அதற்கு செல்வம் மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று செல்வம் குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதில் ஆத்திரம் அடைந்த செல்வம் வீட்டில் வாங்கி வைத்திருந்த ஆசிட்டை எடுத்து முத்து ராமலட்சுமியின் முகத்தில் வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். ஆசிட் வீசியதால் முகம் வெந்துபோன முத்துராமலட்சுமி வலியால் அலறி துடித்தார். இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் என்பதால் பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவர் சேர்ந்தார். தன் மீது ஆசிட் வீசப்பட்டது குறித்து நெல்லை போலீசாரிடம் முத்துராமலட்சுமி புகார் செய்தார்.
ஆசிட் வீசிய சம்பவம் தேவகோட்டையில் நடந்து இருப்பதால் அதுபற்றி சிவகங்கை மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தேவகோட்டை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் முத்துராமலட்சுமி வசித்து வந்த வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.
ஆசிட் வீச்சு தொடர்பாக முத்துராமலட்சுமியின் கள்ளக்காதலன் செல்வம் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர் எங்கு இருக்கிறார்? என்பது தெரியவில்லை. அவரை பிடிக்கும் நடவடிக்கையில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
செல்வம் இருக்கும் இடத்தை கண்டறிய அவரது செல்போன் மூலம் போலீசார் துப்புதுலக்கி வருகின்றனர்.