தமிழ்நாடு செய்திகள்
சோளிங்கரில் வாக்கு எண்ணும் மையம் அமைக்க கோரி வேட்பாளர்கள் மறியல்
வேட்பாளர்கள் சோளிங்கர் நகராட்சியில் பதிவாக கூடிய வாக்குகளை சோளிங்கர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைத்து எண்ண வேண்டும் என கோரி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சோளிங்கர்:
தமிழகத்தில் வரும் 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதல் முறையாக சோளிங்கர் நகராட்சி தேர்தலை சந்திக்கிறது.
27 வார்டுகளை கொண்ட இந்த நகராட்சியில் 116 வேட்பாளர்கள் தற்போது களத்தில் உள்ளனர். வேட்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
இதில் தேர்தல் நடத்தும் அலுவலர் பேசியதாவது:-
வேட்பாளர்கள் தங்களது செலவின கணக்கை தினந்தோறும் சமர்ப்பிக்க வேண்டும்.
கொரோனா விதிமுறைகளை முறையாக கையாள வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என வேட்பாளர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.
அப்போது திடீரென்று வேட்பாளர்கள் சோளிங்கர் நகராட்சியில் பதிவாக கூடிய வாக்குகளை சோளிங்கர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைத்து எண்ண வேண்டும் என கோரி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாரிகள் தற்போது ராணிப்பேட்டை தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதனால் ஆவேசமடைந்த வேட்பாளர்கள் சோளிங்கர்- திருப்பதி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தகவல் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவிக்கும் அடிப்படையில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்படும் என கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதனால் அங்கு 1மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.