செய்திகள்
தற்கொலை

நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் வி‌ஷம் குடித்து மாணவர் தற்கொலை

Published On 2021-11-06 06:13 GMT   |   Update On 2021-11-06 06:13 GMT
நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்த மாணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அவரது சொந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆத்தூர்:

அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்பில் சேர (எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்) தேசிய தகுதி நுழைவு தேர்வு (நீட்) நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு நீட் தேர்வு தமிழகத்தில் 18 நகரங்களில் 224 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இதில் 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவமாணவிகள் தேர்வு எழுதினர்.

இதற்கிடையில், நீட் தேர்வில் தோல்வியடைந்துவிடுவோம் என நினைத்து சில மாணவ-மாணவிகள் தற்கொலை முடிவை எடுத்து வருகின்றனர். நீட் தேர்வு தோல்வி பயத்தால் சேலம் மாவட்டம் கூழையூரை சேர்ந்த தனுஷ், அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சியை சேர்ந்த கனிமொழி ஆகியோர் தற்கொலை செய்துகொண்டனர்.

இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வடகரை பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 19). இவர் கடந்த 2018-19 ஆம் ஆண்டு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து முடித்து உள்ளார்.

அதன்பிறகு கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவராக வேண்டும் என்ற ஆசையில் நீட் தேர்வு எழுதி வந்தார். கடந்த ஆண்டு 158 மதிப்பெண் பெற்ற நிலையில் இந்த ஆண்டு 261 மதிப்பெண் பெற்றார். நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்த மாணவர் தோல்வி அடைந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.

இதனால் மனம் உடைந்த சுபாஷ் சந்திரபோஸ் கடந்த 1-ந் தேதியன்று வி‌ஷம் குடித்து உயிருக்கு போராடிய படி வீட்டில் கிடந்தார். இதை பார்த்த பெற்றோர் மாணவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த உறவினர்கள் கதறி துடித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவரது உறவினர்கள் அங்கு திரண்டு உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்த மாணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அவரது சொந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News