செய்திகள்
புலி

மசினகுடியில் 9வது நாளாக தேடுதல் வேட்டை- டிரோன் மூலம் ஆட்கொல்லி புலி கண்காணிப்பு

Published On 2021-10-03 04:44 GMT   |   Update On 2021-10-03 09:57 GMT
புலியை 3 டிரோன் கேமராக்கள் மூலமும், 40-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும் கண்காணித்து வருகின்றனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 4 பேரை அடித்து கொன்ற ஆட்கொல்லி புலியை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

இன்று 9-வது நாளாக தமிழக, கேரள வனத்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மயக்க ஊசி செலுத்த கால்நடை டாக்டர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

புலியை 3 டிரோன் கேமராக்கள் மூலமும், 40-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும் கண்காணித்து வருகின்றனர்.

இதற்கிடையே இன்று தமிழக முதன்மை வன உயிரின காப்பாளர் சேகர்குமார் நீரஜ் இன்று காலை மசினகுடிக்கு வந்தார். அவர் புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தமிழக, கேரள வனத்துறை அதிகாரிகள், அதிரடிப்படையினர், கால்நடை டாக்டர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை சுட்டுபிடிக்க எந்த உத்தரவும் பிறக்கப்படவில்லை.

மாறாக, புலியை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடிப்பதற்கான பணிகள் மட்டுமே நடந்து வருகிறது. இதற்காக கால்நடை டாக்டர்கள், வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். புலி எக்காரணத்தை கொண்டும் சுட்டு கொல்லப்பட மாட்டாது. மயக்க ஊசி செலுத்தி மட்டுமே பிடிக்கப்படும் என்றார்.
Tags:    

Similar News