செய்திகள்
கடலூர் சில்வர் பீச்சில் முக கவசம் அணியாமல் குவிந்த மக்கள் கூட்டத்தை காணலாம்

கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகளை மறந்து கடலூர் சில்வர் பீச்சில் குவிந்த மக்கள்

Published On 2021-04-12 02:40 GMT   |   Update On 2021-04-12 02:40 GMT
கடலூர் சில்வர் பீச்சில் பொதுமக்கள் பெரும்பாலானோர் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்தனர். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை எச்சரித்து அனுப்பினர்.
கடலூர்:

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அரசு பஸ்களில் நின்று கொண்டு பயணம் செய்யக்கூடாது, தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் 50 சதவீத மக்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. இந்த கட்டுப்பாடுகள் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தன. இதேபோல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மெரினா உள்ளிட்ட அனை த்து கடற்கரை பகுதிகளிலும் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பொதுமக்கள் கூடுவதற்கு அரசு தடைவிதித்துள்ளது. ஆனால் கடலூர் சில்வர் பீச்சில் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் கூடுவதற்கு அரசும், மாவட்ட நிர்வாகமும் எவ்வித தடையும் விதிக்கவில்லை.

இதனால் நேற்று மாலை 4 மணி முதல் கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடலூர் சில்வர் பீச்சுக்கு இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் படையெடுத்தனர். பின்னர் அவர்கள் கொரோனா வைரசால் ஏற்படும் பாதிப்புகளை மறந்து சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கடற்கரையில் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தனர். மேலும் கடலில் குளித்தும் மகிழ்ந்தனர். இதில் பெரும்பாலானோர் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்தனர். இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கடலூர் சில்வர் பீச்சுக்கு வரும் பொதுமக்களை போலீசார் சோதனை செய்து, முக கவசம் அணிந்து வருபவர்களை மட்டுமே கடற்கரைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். மேலும் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும் என்றனர்.
Tags:    

Similar News