செய்திகள்
அபராதம்

குன்னூர் பிரச்சார கூட்டத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத தி.மு.க.வினருக்கு ரூ.5000 அபராதம்

Published On 2021-03-22 10:59 IST   |   Update On 2021-03-22 10:59:00 IST
குன்னூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தி.மு.க சார்பில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

குன்னூர்:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொற்று அதிகரிப்பதை தொடர்ந்து முககவசம், சமூக இடை வெளியை கடைபிடிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. முககவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

குன்னூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தி.மு.க சார்பில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

1000- க்கும் மேற்பட்ட தி.மு.கவினர் மற்றும் காங்கிரஸ், ம.தி.மு.க உள்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் சமூக இடைவெளி இல்லாமல் நடைபெறுவதாகவும், சிலர் முககவசம் அணியாமல் பங்கேற்று இருப்பதாகவும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் வந்ததது.

உடனடியாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விரைந்து மண்டபத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு முககவசம், சமூக இடைவெளியை இல்லாதது உறுதியானது.

இதையடுத்து பறக்கும்படை அதிகாரிகள் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Similar News