செய்திகள்
கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஜெய்சங்கரை போலீசார் மீட்ட போது எடுத்த படம்.

தா.பழூர் அருகே வாலிபரை அரிவாளால் வெட்டிய கண்டக்டர்

Published On 2021-03-06 12:26 GMT   |   Update On 2021-03-06 12:28 GMT
தா.பழூர் அருகே வாலிபரை அரிவாளால் வெட்டிய கண்டக்டரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மதனத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 45). அரசு பஸ் கண்டக்டரான இவர் நேற்று சாலையோரத்தில் சென்றவாறு, அந்த வழியாக வந்தவர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் திடீரென ஆவேசம் அடைந்த ஜெய்சங்கர் கையில் வைத்திருந்த அரிவாளால், சாலையோரத்தில் உள்ள ஒரு வீட்டில் வைக்கோல் அடுக்க பரண் அமைக்கும் வேலை செய்து கொண்டிருந்த கலைவாணன்(35) என்பவரின் தலையில் வெட்டியதாகவும், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தியதாகவும் கூறப்படுகிறது.

அருகில் இருந்த பொதுமக்கள் சுதாரித்துக்கொண்டு கலைவாணனை ஜெய்சங்கரிடம் இருந்து காப்பாற்றவும், ஜெய்சங்கரை தடுத்து நிறுத்தவும் முயற்சி செய்தனர். ஆனால் ஜெய்சங்கர் மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்த முயன்றுள்ளார். இதனால் கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்து, ஜெய்சங்கரை தாக்கி, சாலையோரத்தில் இருந்த கம்பத்தில் கட்டி வைத்தனர். மேலும் பலத்த காயமடைந்த கலைவாணனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தா.பழூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கட்டி வைக்கப்பட்டிருந்த ஜெய்சங்கரை மீட்டனர். மேலும் அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்ப போலீசார் முயன்றனர். ஆனால் ஆம்புலன்சில் ஏறாமல் போலீசாருடன், ஜெய்சங்கர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவரை சமாதானப்படுத்தி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

அங்கு விரைந்து வந்த போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ், நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் குறித்து தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News