செய்திகள்
வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் குழந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்ட சங்கீதாவை படத்தில் காணலாம்.

வேலூர் போலீஸ் நிலையம் முன்பு குழந்தையுடன் இளம்பெண் திடீர் தர்ணா

Published On 2021-02-27 00:41 GMT   |   Update On 2021-02-27 00:41 GMT
கணவரை மீட்டுத்தரக்கோரி வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு குழந்தையுடன் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
வேலூர்:

வேலூர் சலவன்பேட்டை பாரதியார்நகரை சேர்ந்தவர் சங்கீதா (வயது 30). இவர் நேற்று காலை திடீரென வேலூர் அண்ணா சாலையில் உள்ள மகளிர் போலீஸ் நிலையம் முன்பு குழந்தையுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சங்கீதா போலீசாரிடம் கூறியதாவது:-

எனக்கும் காகிதப்பட்டறையை சேர்ந்த சத்யா என்ற சத்தியமூர்த்தி (35) என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சத்தியமூர்த்தி, வேலூர் மாவட்ட சூர்யா ரசிகர் மன்ற தலைவராக உள்ளார்.. எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் சத்தியமூர்த்திக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் பெங்களூருவுக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு அந்த பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார். இதுகுறித்து எனக்கு தெரியவரவே அவரின் தாயாரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னை துன்புறுத்துகிறார்கள். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கடந்த மாதம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தேன். அதன் பேரில் வேலூர் மகளிர் போலீஸ் நிலைய போலீசார் மனு குறித்து விசாரித்தனர். ஆனால் அவரை அழைத்து விசாரிக்கவில்லை.

எனது கணவரை மீட்டு என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே பிரச்சினை காரணமாக சங்கீதா கடந்த மாதம் மாவட்ட வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றது குறிப்பிடத்தக்கது. வேலூர் போலீஸ் நிலையம் முன்பு இளம்பெண் குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News