செய்திகள்
கைது

கடலூர் மாவட்டத்தில் 41 ரவுடிகள் உள்பட 50 பேர் அதிரடி கைது

Published On 2021-02-25 15:32 GMT   |   Update On 2021-02-25 15:32 GMT
கடலூர் மாவட்டத்தில் 41 ரவுடிகள் உள்பட 50 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கடலூர்:

தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான ஆயத்த பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த தேர்தலை அமைதியான முறையில் நடத்தவும், சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் சுமுகமாக நடத்துவதற்கும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி மாவட்டத்தில் உள்ள ரவுடிகள், அவர்களது கூட்டாளிகளை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி மாவட்டத்தில் உள்ள 7 உட்கோட்டத்திற்குட்பட்ட 46 போலீஸ் நிலையங்களிலும் ரவுடிகள் பட்டியல், கொலை, கொள்ளை போன்ற வழக்குகளில் தொர்புடைய பழைய குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். கடலூர் தேவனாம்பட்டினம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட குற்றவாளிகள் தணிகைவேல், முத்து, குணசசேகரன் உள்பட 6 பேர், அண்ணாமலைநகர் போலீஸ் நிலைய எல்லை பகுதியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி பாடலீஸ்வரன், கடலூர் முதுநகர் தாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் நெய்வேலி வீரமணி, குறிஞ்சிப்பாடி தீபன் என மாவட்டம் முழுவதும் 41 ரவுடிகள், அவரது கூட்டாளிகள் என 50 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த நடவடிக்கை தொடரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News