செய்திகள்
ஆமை

வேதாரண்யம் அருகே இறந்து கரை ஒதுங்கிய ஆலிவர் ரெட்லி ஆமை-டால்பின்

Published On 2021-01-22 08:13 GMT   |   Update On 2021-01-22 08:13 GMT
வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளம் கடற்கரை பகுதியில் சுமார் 50 கிலோ எடையுள்ள ஆலிவர் ரெட்லி ஆமையும் உடன் சிறிய வகை டால்பினும் இறந்து கரை ஒதுங்கி கிடந்தது.
வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் இருந்து புஷ்பவனம் கடற்கரை பகுதி வரை பருவமழை காலங்களில் பசுபிக் பெருங்கடல் பகுதியில் வாழ்ந்து வரும் அரிய வகை ஆலிவர் ரெட்லி ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக 2 ஆயிரம் கி.மீ நீரோட்டத்திற்கு தகுந்தவாறு கடந்து இப்பகுதிக்கு வந்து, மேடான மணல் பரப்பில் குழி தோண்டி 25 முட்டைகள் வரை இட்டு செல்லும்.

வனத்துறையினர் அந்த முட்டைகளை சமூக விரோதிகள், எடுத்து செல்லாமல் தடுக்க கோடியக்கரை ஆறுகாட்டுத்துறை ஆமை குஞ்சுகள் பொறிப்பகத்தில் சேகரித்துக் கொண்டு வந்து பாதுகாப்பாக வைத்து விடுவர்.

அந்த முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவந்தவுடன் சுமார் 15 நாட்களுக்கு குறையாமல் அந்த பொறிப்பகத்தில் வைத்து வளர்த்து கடலில் விட்டுவிடுவர். இந்த நிலையில் வெள்ளப்பள்ளம் கடற்கரை பகுதியில் சுமார் 50 கிலோ எடையுள்ள ஆலிவர் ரெட்லி ஆமையும் உடன் சிறிய வகை டால்பினும் இறந்து கரை ஒதுங்கி கிடந்தது. வழக்கமாக கடல்வாழ் உயிரினங்கள் இயற்கை சீற்றம், கப்பல் மற்றும் படகுகளின் விசிறியில் அடிபட்டு கரை ஒதுங்குவது வழக்கம். நாகை மாவட்ட வனத்துறையினர் கால்நடை மருத்துவருடன் சென்று ஆலிவர் ரெட்லி ஆமை, டால்பினை உடற் பரிசோதனை செய்து புதைத்தனர்.
Tags:    

Similar News