செய்திகள்
தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கையே தொடரும்- செங்கோட்டையன் பேட்டி
தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கையே தொடரும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
கடத்தூர்:
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோபியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
‘நிவா்’ புயல் வந்த போது முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையால் எந்தவித பெரிய பாதிப்பும் ஏற்படவில்லை. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் சென்று பார்வையிட்டு நிவாரண பணிகள் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எங்களது பயணங்கள் மக்களை நோக்கி செல்கிறது. மக்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிற அரசாக திகழ்கிறது. அதற்காக நாங்கள் அரும்பணியாற்றி வருகிறோம்.
நம்பியூர் பஸ் நிலையம் கட்டுவதில் முறைகேடு என கனிமொழி எம்.பி. பேசி உள்ளார். அவர் எப்படி பேசுவதென்பது என தெரியாமல் பேசுகிறார். ஒன்று கொள்கை ரீதியாக பேசவேண்டும். அல்லது செய்கின்ற பணிகளை தெரிந்து பேச வேண்டும். எதுவும் தெரியாமல் பேசி உள்ளார்.
தமிழக அரசை பொறுத்தவரை இருமொழி கொள்கை என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு. இதுபற்றி மத்திய அரசுக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். மேலும் சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளின் சாா்பில் ஒருங்கிணைந்த தீா்மானம் நிறைவேற்றப்பட்டு அதுகுறித்து மத்திய அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா தடுப்பு ஊசி பள்ளிக்குழந்தைகளுக்கு முன்னுாிமை அளித்து போடப்படுமா? என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதில் அளிக்கையில், ‘மத்திய அரசால் தடுப்பு ஊசி எந்த அளவுக்கு தயாா் செய்யப்படுகிறது என்பதை பொறுத்து அதற்கேற்ப மத்திய அரசிடம் வேண்டுகோள் வைக்கப்படும்,’ என்றார்.