செய்திகள்
அரசியலுக்கு ரஜினியை வரவேற்று வீடுகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்

அரசியலுக்கு ரஜினியை வரவேற்று வீடுகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களால் பரபரப்பு

Published On 2020-11-12 08:07 GMT   |   Update On 2020-11-12 08:07 GMT
வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் ''எங்கள் குடும்ப ஓட்டு ரஜினிக்கே" என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர் பலரது வீடுகளில் ஒட்டப்பட்டுள்ளது.
வேலூர்:

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறியதை அடுத்து அவர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே சென்றது.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் அவர் இன்னும் கட்சி அறிவிப்பை வெளியிடவில்லை. இதனால் அவர் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ரஜினிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பல்வேறு விதமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள வேலூர், காட்பாடி, வாணியம்பாடி, ஆற்காடு, சோளிங்கர், கே.வி.குப்பம் உள்ளிட்ட 13 சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள் ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் விதமாக “உங்களுக்காக கடவுள் கிட்ட நாங்க வேண்டிக்கிறோம். எங்களுக்கு நல்லாட்சித்தர நீங்க வாங்க ரஜினி’’ என்று உருக்கமாக போஸ்டர்களை ஒட்டி வந்தனர்.

தற்போது வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் ‘‘எங்கள் குடும்ப ஓட்டு ரஜினிக்கே’’ என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர் பலரது வீடுகளில் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த ஸ்டிக்கரை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், அந்தந்த வீட்டின் உரிமையாளர்களிடம் அனுமதி பெற்று ஒட்டியதாக கூறப்படுகிறது.

ரஜினியை அரசியலுக்கு வரவேற்று வீடு தோறும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News