செய்திகள்
நாகையில் பெய்த மழையால் நேற்று சாலையில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்ற வாகனங்களை படத்தில் காணலாம்.

நாகை பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை

Published On 2020-09-28 14:26 GMT   |   Update On 2020-09-28 14:26 GMT
நாகை பகுதியில் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது காற்றின் வேகத்தில் டீக்கடை பாய்லர் பறந்தது.
நாகப்பட்டினம்:

நாகையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதக்கியது. இதனால் சிறுவர் முதல் முதியவர் வரை பெரும் அவதிப்பட்டு வந்தனர். பகலில் இருந்த வெயிலின் தாக்கம் இரவில் வெப்பமாக தென்பட்டதால் குழந்தைகள், முதியவர்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இந்தநிலையில் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதியத்திற்கு பின்னர் வானம் கருமேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் 4.15 மணி அளவில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை 1 மணி நேரம் நீடித்தது.

சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக நாகை தாமரைக்குளம் அருகே உள்ள மின்கம்பம் சாய்ந்தது. இதனால் நகர துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பப்ளிக் ஆபீஸ் ரோடு, காடம்பாடி, நம்பியார் நகர் உள்ளிட்ட இடங்களில் 3 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

இதனால் நாகை சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. புதிய பஸ் நிலையம் உள்பட நகர் பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.

இதேபோல் வேளாங் கண்ணி, சிக்கல், நாகூர், திட்டச்சேரி, திருமருகல், கீழ்வேளூர், பொறையாறு, கொள்ளிடம், செம்பனார் கோவில் ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. பலத்த மழையால் நாகை சுற்று வட்டார பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ந்த இதமான சூழ்நிலை நிலவியது. மழையால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags:    

Similar News