செய்திகள்
சாலை அமைக்க 2 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய விவசாயிகள்

சத்தியமங்கலம் அருகே சாலை அமைக்க 2 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய விவசாயிகள்

Published On 2020-09-08 14:42 IST   |   Update On 2020-09-08 14:42:00 IST
சத்தியமங்கலம் அருகே சாலை அமைக்க 2 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய விவசாயிகளுக்கு கோணமூலை ஊராட்சி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கோணமூலை ஊராட்சிக்கு உட்பட்ட அக்கரை நெகமம் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சாலை அமைப்பதற்கு அப்பகுதி விவசாயிகள் 2 ஏக்கர் நிலத்தை தானமாக கோணமூலை ஊராட்சி நிர்வாகத்திற்கு வழங்கினார்கள்.

அக்கரை நெகமம் கிராமத்திலிருந்து சக்திவேல் தோட்டம் வரை உள்ள விவசாய விளை நிலங்கள் வழியாக அப்பகுதி விவசாயிகளுக்கு சொந்தமான வண்டிப்பாதை உள்ளது.

இந்த வண்டிப்பாதை நிலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சாலை அமைப்பதற்காக ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க அப்பகுதி விவசாயிகள் முடிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து கோணமூலை ஊராட்சி தலைவர் செந்தில்நாதன் தலைமையில் வருவாய் துறையினர் இந்த நிலத்தை அளவீடு செய்து பின்னர் முறையாக சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து ஊராட்சி நிர்வாகத்திற்கு 2 ஏக்கர் நிலத்தை விவசாயிகள் ஒப்படைத்தனர்.

இதற்கான விழா கோணமூலை ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சத்தியமங்கலம் ஒன்றிய குழு தலைவர் இளங்கோ, கோணமூலை ஊராட்சி தலைவர் செந்தில் நாதன், துணை தலைவர் ஜெகதீசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்துல் வஹாப், பெருமாள், கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கர், ஊராட்சி செயலாளர் அருண் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

2 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய விவசாயிகளுக்கு கோணமூலை ஊராட்சி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Similar News