செய்திகள்
அரசு பேருந்துகள்

திருப்பூரில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு 344 பஸ்கள் இயக்கம்

Published On 2020-09-05 09:27 GMT   |   Update On 2020-09-05 09:27 GMT
திருப்பூரில் இருந்து சென்னை, மதுரை, தேனி, சேலம், திண்டுக்கல், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்சி, ஈரோடு, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு 344 பஸ்கள் இயக்கப்படுகிறது.
திருப்பூர்:

திருப்பூர் போக்குவரத்து பணிமனையில் 559 மாநகர், புறநகர் பேருந்துகள் உள்ளன. இவற்றில் 215 பஸ்கள் கடந்த 1-ந்தேதி முதல் திருப்பூர் மாவட்டத்துக்குள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வருகிற 7-ந்தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் பஸ்கள் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி திருப்பூரில் இருந்து சென்னை, மதுரை, தேனி, சேலம், திண்டுக்கல், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்சி, ஈரோடு, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு 344 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதற்காக பஸ்கள் அனைத்தும் பழுது நீக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டும், சமூக இடைவெளியுடன் பயணிகள் அமர்ந்து செல்லும் வகையிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த பணிகளை போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர். அவர்கள் கூறும்போது,

7-ந்தேதி முதல் வெளிமாவட்டங்களுக்கு பஸ்களை இயக்க தயார் நிலையில் உள்ளோம். அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பஸ்கள் இயக்கப்படும்.

பயணிகள் அனைவரும் பஸ்சில் ஏறும் முன்பு உடல் வெப்பநிலை செய்யப்பட்டு, முககவசம் அணிந்தால் மட்டுமே பஸ்சில் ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்றனர்.
Tags:    

Similar News