செய்திகள்
கலெக்டர் அருண்

தீபாவளி பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்

Published On 2020-08-14 06:41 GMT   |   Update On 2020-08-14 06:41 GMT
தீபாவளிக்கு பட்டாசு கடை வைக்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை கலெக்டர் அருண் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

எதிர்வரும் தீபாவளியை முன்னிட்டு புதுவை மற்றும் ஏனாம் பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விருப்பம் உள்ளவர்கள் புதுச்சேரி பேட்டையன்சத்திரம் வழுதாவூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் அடுத்த (செப்டம்பர்) மாதம் 4-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். வேலை நாட்களில் அலுவலக நேரத்தில் விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

புகைப்படத்துடன்கூடிய பூர்த்தி செய்யப்பட்ட படிவம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2, பட்டாசு விற்பனை செய்யப்போகும் இடத்தின் வரைபடம், கடையில் பட்டாசு வைத்துக்கொள்ளும் அளவு, கடைக்கு செல்வதற்குரிய வழிகள், சுற்றியுள்ள சாலைகள், 15 மீட்டர் சுற்றளவில் உள்ள பிற கடைகள் குறித்தும் குறிப்பிட வேண்டும்.

இடத்தின் உரிமை தொடர்பான பத்திர நகல், வாடகை கடையாக இருப்பின் வாடகை பத்திரம், மற்றும் இடத்தின் உரிமையாளரிடம் கடை வைக்க ஆட்சேபனை இல்லை என்ற நோட்டரி பத்திரம், ரேசன் கார்டு, வாக்காளர், ஆதார் அட்டை நகல்கள் போன்ற இணைப்புகளின் நகல்கள் 3 பிரதிகள் கூடுதலாக இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்ப படிவத்தினை www.collectorate.py.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெறுவதற்கு வருகிற 4-ந்தேதிக்குள் விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே தீபாவளியின் பொருட்டு ஏற்றுக்கொள்ளப்படும். கொரோனா பரவல் சூழ்நிலையை பொறுத்து பட்டாசு கடை விண்ணப்பங்கள் ரத்து செய்வதற்கும் உட்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News