செய்திகள்
கஞ்சா கேட்ட தகராறில் பெயிண்டர் வெட்டிக்கொலை- நண்பர் கைது
தாம்பரம் அருகே கஞ்சா கேட்ட தகராறில் பெயிண்டரை வெட்டிக்கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்:
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் நேதாஜி நகரை சேர்ந்தவர் ரவி (வயது 35). பெயிண்டர். இவரது நண்பர் பதுவஞ்சேரியை சேர்ந்த ராஜேஷ் (37). இவர்கள் இருவருக்கும் கஞ்சா புகைக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கஞ்சா புகைத்து கொண்டிருந்த ராஜேஷிடம், ரவி கஞ்சா கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் ரவி ராஜேசை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ராஜேஷ் வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்து, ரவியை ஓட,ஓட விரட்டி வெட்டினார்.
இதைப்பார்த்து தடுக்க வந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதால், அவர் உயிருக்கு பயந்து ஓடிவிட்டார். இதற்கிடையில் கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயமடைந்த ரவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் அங்கு வந்து ரவியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுபற்றி பீர்க்கண்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக் இருந்த ராஜேசை கைது செய்தனர்.