செய்திகள்
டாக்டர்கள் தர்ணா போராட்டம்.

குன்னூர் அரசு ஆஸ்பத்திரிடாக்டர்கள் திடீர் தர்ணா போராட்டம்

Published On 2020-07-17 17:22 IST   |   Update On 2020-07-17 18:13:00 IST
குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் திடீர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
குன்னூர்:

குன்னூரில் உள்ள லாலி அரசு ஆஸ்பத்திரிக்கு குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து ஏழைகள் சிகிச்சைக்காக வருகின்றனர். லாலி அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குழந்தைகளுக்கு தனி வார்டு, முதல்வர் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தனி வார்டு, அவசர நோயாளிகள் பிரிவு போன்றவை செயல்பட்டு வருகின்றன. மேலும் தாலுகா ஆஸ்பத்திரியாக இருப்பதால் விபத்தில் சிக்கியவர்கள் மற்றும் அவசர நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

லாலி அரசு ஆஸ்பத்திரியில் 11 டாக்டர்கள் உள்ளனர். இவர்களில் ஒரு டாக்டர் கோவையில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக மாற்றப்பட்டுள்ளனர். ஒரு டாக்டர் மருத்துவ விடுப்பிலும் ஒரு டாக்டர் தலைமை டாக்டர் பொறுப்பாகவும் உள்ளார். தற்போது 8 டாக்டர்கள் மட்டுமே பணியில் இருந்து வருகின்றனர்.இந்த நிலையில் லாலி அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் 8 டாக்டர்களில் 4 பேர் கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கும் 4 டாக்டர்கள் பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கும் இரவோடு இரவாக மாற்றப்பட்டு ஆணை வழங்கப்பட்டது. அதே போன்று கூடலூர் மற்றும் பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிகளிலிருந்து 8 டாக்டர்கள் குன்னூருக்கு மாற்றப்பட்டனர்.

திடீர் பணி மாற்றத்தை அறிந்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து டாக்டர்கள் நேற்று காலை ஆஸ்பத்திரி வளாகத்தில் மாறுதல் உத்தரவை திரும்ப பெற கோரி சமூக இடைவெளியை கடைபிடித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதியுற்றனர். டாக்டர்கள் தர்ணா போராட்டம் குறித்து தகவலறிந்த சுகாதார துறை இணை இயக்குனர் டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பணிமாறுதல் ஆணையை நிறுத்தி வைப்பதாக கூறியதால் மதியம் 12.15 மணியளவில் டாக்டர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Similar News