செய்திகள்
டாஸ்மாக் கடை

திருப்புவனத்தில் 4 டாஸ்மாக் கடைகள் அடைப்பு- மாவட்ட நிர்வாகம் உத்தரவு

Published On 2020-06-28 12:24 IST   |   Update On 2020-06-28 12:24:00 IST
மதுப்பிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றதால் திருப்புவனத்தில் 4 டாஸ்மாக் கடைகள் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி அடைக்கப்பட்டன.
திருப்புவனம்:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் உள்ள புலியூர், கலியாந்தூர் சாலை, வன்னிகோட்டை சாலை ஆகிய பகுதிகளில் 4 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. இதில் புலியூர் டாஸ்மாக் கடை மதுரை மாவட்டத்தை ஒட்டியுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக மதுரை மாவட்டம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று புலியூர் டாஸ்மாக் கடையில் மதுவாங்க குவிந்தனர்.

ஒரே நேரத்தில் 500-க்கு மேற்பட்டவர்கள் சமூகஇடைவெளி இல்லாமல் திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர், போலீசார் விரைந்து வந்து சமூக இடைவெளியுடன் நிற்க வைத்து மது விற்பனை நடைபெற்றது.

கடந்த 3 நாட்களாக மதுப்பிரியர்கள் குவிந்தவண்ணம் இருந்தனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மதுப்பிரியர்கள் திருப்புவனம் டாஸ்மாக் கடைகளில் குவிந்துவருவதால் மேலும் தொற்று பரவல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து திருப்புவனம் பகுதியில் உள்ள புலியூர், கலியாந்தூர் சாலை, வன்னிகோட்டை சாலை பகுதியில் உள்ள 4 டாஸ்மாக் கடைகளை நேற்று முதல் மறு உத்தரவு வரும் வரை அடைக்குமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இதன்படி அதிகாரிகள் 4 டாஸ்மாக்கடைகளையும் அடைத்து சீல் வைத்தனர். இதனால் மதுவாங்க ஆவலுடன் சென்ற குடிமகன்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Similar News