செய்திகள்
முருகன்

வேலூர் ஜெயிலில் உண்ணாவிரதம்: உடல் சோர்வால் முருகனுக்கு குளுகோஸ் ஏற்றம்

Published On 2020-06-25 03:25 GMT   |   Update On 2020-06-25 03:25 GMT
வேலூர் சிறையில் 24 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் முருகனுக்கு உடல் சோர்வடைந்த காரணத்தால் ஒரு பாட்டில் குளுகோஸ் ஏற்றப்பட்டது.
வேலூர் :

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் தனி அறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாகக் கைதிகளை அவரது குடும்பத்தினர், உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்று ஏற்பாடாக அவர்கள் செல்போன் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேச அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

அதன்படி முருகன் செல்போன் வாட்ஸ் அப் வீடியோ காலில் மனைவி நளினி மற்றும் உறவினர்களிடம் பேச அனுமதிக்கும்படி ஜெயில் நிர்வாகத்துக்குக் கோரிக்கை வைத்தார். ஆனால் இதற்கு ஜெயில் அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. இதனால் மனமுடைந்த முருகன் ஜீவசமாதி அடைய வேண்டி கடந்த 1-ந்தேதி முதல் ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

ஜெயில் அதிகாரிகள் பலமுறை உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி கோரிக்கை விடுத்தும் அதை ஏற்க மறுத்து விட்டார். யாருடன் பேசாமல் தியான நிலையில் இருந்து வரும் முருகனின் உடல்நிலையை டாக்டர்கள் தினமும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு முருகனின் உடல்நிலை திடீரெனச் சோர்வடைந்தது. அதையடுத்து அவருக்கு ஒரு பாட்டில் குளுகோஸ் ஏற்றப்பட்டது. இந்த நிலையில் முருகன் நேற்று 24-வது நாளாக உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார்.
Tags:    

Similar News