செய்திகள்
வீராணம் ஏரி

வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2020-06-03 08:33 GMT   |   Update On 2020-06-03 08:33 GMT
கீழணையில் இருந்து 2 நாட்களாக வடவாற்றில் நாள் ஒன்றுக்கு 110 கன அடிவீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் வீராணம் ஏரிக்கு 97 கன அடியாக வரத்து இருந்தது.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.

ராட்சத குழாய் மூலம் சென்னைக்கு குடிநீர் அனுப்பபடுகிறது தற்போது கோடைவெயில் காரணமாக ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

எனவே சென்னை குடிநீருக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 57 கன அடி மட்டும் தண்ணீர் ஏரியில் இருந்து அனுப்பப்படுகிறது. நீர்மட்டம் சரிந்ததால் சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் பெய்த கோடை மழை, நீர் அணைகள் பராமரிப்பு காரணமாக தேக்க முடியவில்லை. இதனால் மேற்கு மாவட்ட அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் காவிரி ஆறு வழியாக கல்லணைக்கு வந்தது.

தற்போது கல்லணையில் மராமத்துப் பணிகள் நடக்க இருப்பதால் கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கீழணையில் தேக்கி வைக்கப்பட்டு, அதனை வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு திருப்பி விடப்பட்டது. கீழணையில் இருந்து 2 நாட்களாக வடவாற்றில் நாள் ஒன்றுக்கு 110 கன அடிவீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த தண்ணீர் வீராணம் ஏரிக்கு 97 கன அடியாக வரத்து இருந்தது. தற்போது வீராணம் ஏரியில் 269.5 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

Tags:    

Similar News