செய்திகள்
கொலை

தந்தை அடித்துக்கொலை- கல்லூரி மாணவர் கைது

Published On 2020-06-01 01:38 GMT   |   Update On 2020-06-01 01:38 GMT
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மதுகுடித்து விட்டு தகராறில் ஈடுபட்ட தந்தையை மகனே அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள விசூர் காலனியை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன்(வயது 44). தொழிலாளி. இவருடைய மனைவி சரளா(38). இவர்களுக்கு அலெக்ஸ் பாண்டியன்(21) என்கிற மகனும், சுவேதா (17) என்கிற மகளும் உள்ளனர். அலெக்ஸ் பாண்டியன் முண்டியம்பாக்கத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். சுவேதா பண்ருட்டியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

இந்த நிலையில் சவுந்தரபாண்டியன் தினமும் மதுகுடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் அவர்களது குடும்பத்தினரிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினமும் சவுந்தரபாண்டியன் வழக்கம்போல் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த மனைவி சரளா, மகள் சுவேதாவிடம் அவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர்களை வீட்டை விட்டு அடித்து வெளியே துரத்தியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர்கள் இருவரும் நெய்வேலியில் உள்ள சரளாவின் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டனர். இதற்கிடையே வெளியே சென்றிருந்த அலெக்ஸ் பாண்டியன் வீட்டுக்கு வந்து, தனது தந்தையிடம் இதுகுறித்து தட்டிக்கேட்டுள்ளார். அதற்கு தனது மகன் என்றும் பாராமல் அலெக்ஸ்பாண்டியனை சவுந்தரபாண்டியன் தாக்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அலெக்ஸ் பாண்டியன், அருகில் இருந்த கட்டையை எடுத்து சவுந்தரபாண்டியனை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்தார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சவுந்தரபாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி அறிந்த பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அலெக்ஸ்பாண்டியனை கைது செய்தனர். 
Tags:    

Similar News