செய்திகள்
கொரோனா வைரஸ்

காட்பாடி அருகே கோயம்பேடு வியாபாரி மூலம் தாய்க்கும் கொரோனா பரவியது

Published On 2020-05-14 14:13 IST   |   Update On 2020-05-14 14:13:00 IST
காட்பாடி அருகே கோயம்பேடு வியாபாரி மூலம் தாய்க்கும் கொரோனா பரவியதால் வேலூரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் 14 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.

காட்பாடி அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தை சேர்ந்த 30 வயது வாலிபர் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வியாபாரத்திற்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பினார்.

அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினர் தனிமைபடுத்தப்பட்டனர். மேலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் வாலிபரின் தாயாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது இன்று உறுதியானது. அவருக்கு 55 வயதாகும். கோயம்பேடு சென்றுவிட்டு வந்த வாலிபர் மூலம் அவரது தாயாருக்கு கொரோனா பரவியதாக தெரிவித்துள்ளனர்.

எர்த்தாங்கல் கிராமம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு சுகாதாரப் பணிகள் செய்து வருகின்றனர். மேலும் அங்கு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35-ஆக உயர்ந்துள்ளது.

Similar News