செய்திகள்
கோப்பு படம்

கிரிக்கெட் விளையாடியதை கண்காணித்த ஆளில்லா குட்டி விமானம் மீது கல்வீசிய வாலிபர் கைது

Published On 2020-04-27 10:24 IST   |   Update On 2020-04-27 10:24:00 IST
ஊரடங்கு உத்தரவை மீறி கிரிக்கெட் விளையாடியதை கண்காணித்த ஆளில்லா குட்டி விமானம் மீது கல்வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நாகை மாவட்டம் சீர்காழியில் ஊரடங்கின்போது பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் பல்வேறு கிராமங்களில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவதாக தகவல் வந்ததையடுத்து, போலீசார் ஆளில்லா குட்டி விமானம்(டிரோன்) மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது சீர்காழி அருகே உள்ள எடமணல் கிராமத்தில் வயல் பகுதியில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தனர். அவர் களை போலீசார் ஆளில்லா குட்டி விமானத்தை பறக்கவிட்டு கண்டுபிடித்து விரட்டினர். அப்போது ஒரு இளைஞர், அதன் மீது கல்வீசி தாக்கினார். இந்த காட்சி அதில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவானதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து சீர்காழி போலீசார் கிரிக்கெட் விளையாடிய 10-க்கும் மேற்பட்டவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஆளில்லா குட்டி விமானம் மீது கல்வீசி தாக்கியவர் எடமணல் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம்(வயது 20) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தனர்.

மேலும் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் அனைவரையும் போலீஸ் நிலையம் முன்பு நிற்க வைத்து ‘விழித்திரு.. தனித்திரு... கிரிக்கெட் விளையாடாமல் வீட்டில் இரு....’ என்ற வாசகத்தை கூறி உறுதிமொழி ஏற்க செய்தனர்.

Similar News