செய்திகள்
கோப்பு படம்

நாகை அரசு மருத்துவமனையில் பிரசவத்தில் பெண் மரணம் - உறவினர்கள் சாலை மறியல்

Published On 2020-02-15 14:45 GMT   |   Update On 2020-02-15 14:45 GMT
நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது பெண் பலியான சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:

நாகை வெளிப்பாளையம் பச்சைபிள்ளையார் கோயில் கீழ்கரையைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி பெரியநாயகி(வயது19). கர்ப்பம் அடைந்த பெரிய நாயகியை பிரசவத்திற்காக நாகை அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று சேர்த்தனர். மதியம் பெரியநாயகிக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிறிது நேரம் உடல் நலத்துடன் அவர் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திடீரென பெரியநாயகிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு ரத்த போக்கு அதிகமானதால் டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து உள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பெரியநாயகி இறந்தார்.

பெரியநாயகி இறந்த செய்தி கேட்டு கணவர் சரவணன் மற்றும் உறவினர்கள் ஒன்று கூடி நிலைய மருத்துவ அதிகாரி அறையை முற்றுகையிட்டனர். மேலும் பெரியநாயகி இறப்பிற்கு காரணம் டாக்டர்களின் அலட்சியமான போக்கே, சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிலைய மருத்துவ அதிகாரி அறையை முற்றுகையிட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடையாதவர்கள் அரசு தலைமை மருத்துவமனை முன்பு கூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாக்டர்களின் அலட்சிய போக்கின் காரணமாக தான் பெரியநாயகி இறந்தார். எனவே டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை மறியல் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று பிறந்த குழந்தையுடன் கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. தகவல் அறிந்த டி.எஸ்.பி. முருகவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாக கூறினர். இதையடுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இது குறித்து நிலைய மருத்துவ அதிகாரி காதர் கூறியதாவது:- நாகை அரசு தலைமை மருத்துவமனை கடந்த 4 ஆண்டு காலமாக பிரசவத்தின் போது மரணம் இல்லாமல் இருந்துள்ளது. மூச்சு திணறல் ஏற்பட்டு நுரையீரல் அடைப்பு காரணமாக உயிரிழப்பு நடந்துள்ளதாகவும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
Tags:    

Similar News