செய்திகள்
முருகன் - நளினி

நளினி, முருகன் உண்ணாவிரதம் நீடிக்கிறது - தனிசிறையில் இருந்து முருகனை வெளியேற்ற ஐகோர்ட்டில் மனு

Published On 2019-10-30 06:45 GMT   |   Update On 2019-10-30 06:45 GMT
நளினி, முருகன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதையடுத்து முருகனை தனிச்சிறையில் இருந்து வெளியேற்றக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக அவரது வக்கீல் தெரிவித்துள்ளார்.
வேலூர்:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன், அவரது மனைவி நளினி உள்பட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் ஆண்கள் ஜெயிலில் முருகனும், பெண்கள் ஜெயிலில் நளினியும் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

முருகனில் அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதால் அவருக்கு சலுகைகள் ரத்து செய்யப்பட்டு தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை கண்டித்து கடந்த 18-ந் தேதி முதல் முருகனும், 27-ந் தேதி முதல் நளினியும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முருகனின் உண்ணாவிரதம் இன்று 13-வது நாளாகவும், நளினியின் உண்ணாவிரதம் இன்று 5-வது நாளாகவும் நீடிக்கிறது.

2 பேரின் உடல்நிலை குறித்து சிறை மருத்துவர்கள் தினமும் 2-முறை பரிசோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், வக்கீல் எழிலரசு ஜெயிலில் முருகனையும், நளினியும் நேரில் சந்தித்துப்பேசினார். இந்த சந்திப்பு குறித்து வக்கீல் புகழேந்தி கூறியதாவது:-

ஜெயிலில் முருகன் அடைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து செல்போன் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து அவருக்கு சிறை அதிகாரிகள் இடையூறுகள் அளித்து வருகின்றனர்.

இதனால், மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள முருகன் கடந்த 18-ந் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக அவரது மனைவி நளினியும் பெண்கள் ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இந்த உண்ணாவிரதத்தால் இருவரது உடல்நிலையும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனினும், விதிமுறை மீறி முருகன் தொடர்ந்து 24 மணி நேரமும் தனி சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

முருகனை தனிச்சிறையில் இருந்து வெளியேற்றக் கோரி அவரது சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். முருகனை தனி சிறையில் இருந்து வெளியேற்றினால் மட்டுமே உண்ணாவிரதத்தை கைவிட உள்ளதாக நளினி தெரிவித்துள்ளார் என்றார்.
Tags:    

Similar News