தனியார் கல்லூரி துப்புரவு பெண் தொழிலாளி மர்ம மரணம்
வேலூர்:
ஓச்சேரியை அடுத்த மாமண்டூர் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 55). இவர் ஓச்சேரியில் உள்ள தனியார் என்ஜனீயரிங் கல்லூரியின் பெண்கள் விடுதியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் விடுதியில் துப்புரவு பணிக்கு சென்ற சரஸ்வதி அன்றிரவு வீட்டுக்கு வரவில்லை. நேற்று காலை அவர், மாமண்டூர் செல்லும் சாலையில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மகள் கலா காவேரிப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை முடிந்து சரஸ்வதியின் உடலை உறவினர்கள் வாலாஜா அரசு மருத்துவ மனையில் இருந்து மாமண்டூர் கிராமத்துக்கு கொண்டு செல்லாமல் நேரடியாக ஓச்சேரியில் உள்ள தனியார் கல்லூரிக்கு இரவு 7 மணியளவில் கொண்டு சென்றனர்.
அங்கு கல்லூரி முன்பு சரஸ்வதியின் உடலை வைத்து அவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு 1 மணி வரை போராட்டம் நடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவேரிப்பாக்கம் போலீசாரும், கல்லூரி நிர்வாகிகளும் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில் சுமுக தீர்வு ஏற்பட்டதால் கலைந்து சென்றனர்.