செய்திகள்
ஜவாஹிருல்லா

டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் - ஜவாஹிருல்லா

Published On 2019-07-29 06:09 GMT   |   Update On 2019-07-29 06:09 GMT
டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

மயிலாடுதுறை:

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாநில தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். இதன்பின்னர் ஜவாஹிருல்லா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களை தமிழக அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். காவிரி டெல்டா பகுதிகளில் விளைநிலங்களில் போலீஸ் பாதுகாப்புடன் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக கெயில் நிறுவனம் குழாய் பதித்து வருவது தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை தரணியை சுடுகாடாக்கும் முயற்சியாக தெரிகிறது.

தனியார் கார்ப்பரேட் கம்பெனிகளின் கூலியாளாக மத்திய-மாநில அரசு விளங்குவதை வன்மையாக கண்டிக்கிறோம். வருகிற ஆகஸ்டு 18-ந் தேதி மயிலாடுதுறையில் நடைபெற உள்ள மீத்தேன் திட்ட எதிர்ப்பு மாநாட்டில் ம.ம.க. மற்றும் த.மு.மு.க. நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள்.

தமிழகத்தில் சில வாரங்களாக தேசிய புலனாய்வு விசாரணை என்ற பெயரில் பலரை கைது செய்வதும் அவர்கள் பரப்பி வரும் செய்திகளும் அமைதியாக வாழும் மக்கள் மத்தியில் பீதியை உருவாக்கி வருகிறது.

மயிலாடுதுறையை தலை நகராக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என நீண்டநாள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்பொழுது அறிவித்துள்ள புதிய மாவட்டங்கள் போல் அனைத்து தகுதிகளும் கொண்ட மயிலாடுதுறையை தமிழக அரசு புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News