செய்திகள்
மயிலாடுதுறையில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை வக்கீல்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியபோது எடுத்தபடம்.

மயிலாடுதுறையில் இன்று எம்எல்ஏ அலுவலகத்தை முற்றுகையிட்டு வக்கீல்கள் போராட்டம்

Published On 2019-07-23 07:45 GMT   |   Update On 2019-07-23 07:45 GMT
மயிலாடுதுறையை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் அலுவலகத்தை இன்று மதியம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறையை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடந்த சில தினங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி மயிலாடுதுறையில் வியாபாரிகள் 3 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் மாயூரம் வழக்குரைஞர் சங்க தலைவர் ராம.சேயோன், மயிலாடுதுறை வழக்குரைஞர் சங்க தலைவர் வேலுகுபேந்திரன் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் அலுவலகத்தை இன்று மதியம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலன் தலைமையில் விரைந்து வந்த போலீசார் வக்கீல்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எம்.எல்.ஏ. வெளியூர் சென்றுள்ளார். அவர் வந்ததும் தனி மாவட்டம் உருவாக்குவது சம்மந்தமாக பேசி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தலாம் என்று போலீசார் கூறினர்.

அதனை ஏற்று வக்கீல்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News