செய்திகள்

ஒடுகத்தூர் அருகே துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை

Published On 2019-06-26 06:12 GMT   |   Update On 2019-06-26 06:12 GMT
ஒடுகத்தூர் அருகே துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

அணைகட்டு:

ஒடுகத்தூர் அடுத்த மேல் அரசம்பட்டு கொல்லையை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 48) விவசாயி. இவரது மனைவி சித்ரா (40), இவர்களுக்கு மோகன்தாஸ், பாலாஜி என்கிற 2 மகன்களும் லோகேஸ்வரி என்ற 1 மகளும் உள்ளனர்.

ஜெய்சங்கருக்கும் அவரது மனைவிக்கும் இடையே நேற்றிரவு தகராறு ஏற்பட்டது. இதனால் ஜெய்சங்கர் கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார்.

இன்று காலை நீண்ட நேரமாகியும் ஜெய்சங்கர் வீடு திரும்பாததால் அவரது மனைவி சித்ரா சந்தேகத்துடன் பல இடங்களில் தேடினார். எங்கும் அவர் இல்லை.

தனது விவசாய நிலத்திற்கு சென்று இருக்கலாம் என்று அங்கு சென்று பார்த்தார்.

அங்கு ஜெய்சங்கர் கிணற்று பகுதியில் உள்ள பம்பு செட்டில் துப்பாக்கியால் தன்னை தானே தொண்டை பகுதியில் சுட்டு தற்கொலை செய்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

இதனை கண்ட சித்ரா கதறி அழுதார். அருகில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு ஓடி வந்தனர். ஜெய்சங்கர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவரிடம் நாட்டு துப்பாக்கி எப்படி வந்தது? எதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார்? என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News