செய்திகள்
போரூர் அருகே 2 வயது மகனை கொன்று தாய் தற்கொலை
போரூர் அருகே மகனுக்கு காது கேட்காத குறையை எண்ணி மனவேதனை அடைந்த தாய் அவனை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.
போரூர்:
சென்னை போரூரை அடுத்த தெல்லியார் அகரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஷ் (25). பெயிண்டர். இவரது மனைவி அஸ்வினி. இந்த தம்பதிக்கு பிரதீப் (4). சக்திவேல் (2) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். பிரதீப்பிற்கு பிறவிலேயே காது கேட்கும் திறன் இல்லை. வாய் பேசவும் மாட்டான். இதனால் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து தற்போது பேச்சு பயிற்சி பெற்று வந்தான்.
இந்த நிலையில் இளைய மகன் சக்திவேலை பரிசோதித்த டாக்டர்கள் அவனுக்கும் காது கேட்காத குறை இருப்பதாக தெரிவித்தனர். ஏற்கனவே ரூ.3 லட்சம்வரை செலவு செய்து மூத்த மகனுக்கு சிகிச்சை பெற்ற நிலையில் இளைய மகனுக்கும் அதே பிரச்சினை ஏற்பட்டதால் அஸ்வினி மனவேதனை அடைந்தார்.
குழந்தைகளுடன் வாழ்வதைவிட சாவதே மேல் என்று விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். மூத்த மகனை மாமியார் வீட்டில் கொண்டு விட்டு விட்டு திரும்பி வந்த மகேஷ் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அஸ்வினி தூக்கில் தொங்கினார். மகன் சக்திவேலை தலையணையால் அமுக்கி கொலை செய்து விட்டு அவர் இந்த முடிவை மேற் கொண்டுள்ளார்.
இதுகுறித்து போரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.