செய்திகள்
தருண்

வாலாஜாவில் 4 வயது குழந்தை கொன்று புதைப்பு: 2-வது கணவருடன் சேர்ந்து தாய் வெறிச்செயல்

Published On 2019-06-18 04:42 GMT   |   Update On 2019-06-18 04:42 GMT
வாலாஜாவில் 2-வது கணவருடன் சேர்ந்து பெற்ற குழந்தையை தாய் கொன்று புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாலாஜா:

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சிப்காட்டை சேர்ந்தவர் ராமச்சந்திரன் கூலித்தொழிலாளி. இவரது மனைவி காவ்யா (வயது 25). இந்த தம்பதிக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தருண்(4) குழந்தை இருந்தது.

மகிழ்ச்சியாக வாழ்ந்த கணவன்- மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் காவ்யா கணவரை பிரிந்து குழந்தையுடன் ராணிப்பேட்டையில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

2017-ம் ஆண்டு காவ்யா ராணிப்பேட்டையில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்தார். அப்போது ராணிப்பேட்டை நகராட்சி குடியிருப்பை சேர்ந்த தியாகராஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது.

2 ஆண்டுகள் தீவிரமாக காதலித்த இவர்கள் கடந்த ஜனவரி மாதம் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். குழந்தையுடன் காவ்யா காதல் கணவருடன் குடும்பம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் குழந்தை அவர்களுக்கு இடையூறாக இருப்பதாக நினைத்தனர். குழந்தையை யாருக்கும் தெரியாமல் கொல்ல முடிவு செய்தனர். கடந்த 10-ந்தேதி வீட்டை காலி செய்து விட்டு வாலாஜா பெல்லியப்பா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர்.

13-ந்தேதி மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த தருணை காவ்யா, தியாகராஜன் இருவரும் தூக்கி வந்தனர். வீட்டுக்குள் சில்வர் அண்டாவில் உள்ள தண்ணீருக்குள் குழந்தையை மூழ்கடித்தனர். மூச்சு திணறிய குழந்தை துடிதுடித்து இறந்தது.

இதனையடுத்து குழந்தையை அரிசி மூட்டையில் கட்டி வைத்தனர். அன்று இரவு தியாகராஜன் மூட்டையில் கட்டப்பட்ட குழந்தையை பைக்கில் எடுத்து சென்று ஆற்காடு டெல்லிகேட் அருகே பாலாற்றுக்கு சென்று பள்ளம் தோண்டி குழந்தையை புதைத்தார். பின்னர் வீடு திரும்பினார். கணவன்- மனைவி இருவரும் எதுவும் நடக்காதது போல் நடந்து கொண்டனர்.

இந்த நிலையில் காவ்யாவின் தாய் நேற்று வந்தார். அவர் குழந்தை பற்றி காவ்யாவிடம் கேட்டார்.

அவர் மழுப்பலாக பதில் கூறினார். இருந்தாலும் அவர் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்ததால் குழந்தையை கொன்று புதைத்தது பற்றி கூறினார்.

இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் அதியமானிடம் காவ்யா சரணடைந்தார். அவர் அளித்த புகாரின் பேரில் வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு, சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் ஆகியோர் காவ்யாவை கைது செய்தனர்.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பற்றி தகவலறிந்த தியாகராஜன் தலைமறைவாகி விட்டார். போலீஸ் விசாரணையில் அவர் மீது ஏராளமான வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் பாலாற்றில் புதைக்கப்பட்டுள்ள குழந்தை உடலை தோண்டி எடுக்க முடிவு செய்துள்ளனர்.

கடந்த மாதம் ஆற்காட்டில் கணவர், குழந்தையை இளம்பெண் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்று புதைத்தார். அதேபோல் மீண்டும் சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News