செய்திகள்
சுப்பாத்தாள் - சாத்தப்பன்

ரெயில் முன் பாய்ந்து வயதான தம்பதி தற்கொலை

Published On 2019-05-27 09:29 IST   |   Update On 2019-05-27 09:30:00 IST
திருச்சி அருகே ரெயில் முன் பாய்ந்து வயதான தம்பதி தற்கொலை செய்துகொண்டனர். இது தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள காடையூர் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாத்தப்பன் (வயது 78). இவரது மனைவி சுப்பாத்தாள் (63). இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினர்.

ஆங்காங்கே சென்று வந்த அவர்கள் சமீபத்தில் திருச்சி அருகே உள்ள பெட்டவாய்த்தலை பகுதிக்கு வந்தனர். அங்குள்ள பஸ் நிலையம் பகுதியில் சுற்றித்திரிந்த அவர்கள் நேற்று அதிகாலையில் அங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த ஜங்ஷன் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் 2 பேரும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைதொடர்ந்து 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக சாத்தப்பனின் மகன் குடும்பத்தினருக்கு ரெயில்வே போலீசார் தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்குப்பின் இன்று அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

வயதான தம்பதி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இவர்கள் பெட்டவாய்த்தலை வந்தது ஏன்? தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Tags:    

Similar News