செய்திகள்

எந்த மதத்தையும் புண்படுத்தி பேச கமல்ஹாசனுக்கு என்ன அவசியம்?- தினகரன் கேள்வி

Published On 2019-05-15 10:57 GMT   |   Update On 2019-05-15 10:57 GMT
எந்த மதத்தையும் புண்படுத்தி பேச நடிகர் கமல்ஹாசனுக்கு என்ன அவசியம்? என்று அரவக்குறிச்சியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூர்:

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் சாகுல்ஹமீதை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலார் டி.டி.வி. தினகரன் அரவக்குறிச்சி புங்கம்பாடி பகுதியில் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வுக்கு எல்லா தொகுதிகளிலும் தோற்று விடுவோம் என பயம் வந்து விட்டது. துரோகம் என்றைக்கும் வென்றதாக வரலாறு கிடையாது. 18 தொகுதிகளிலும் தோற்று விடுவோம் என்ற பயத்தில் எனது ஆதரவாளர்களான 3 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய நோட்டீசு அனுப்பியுள்ளனர். அதற்கு நீதிமன்றம் தடைவிதித்து விட்டது.

நடிகர் கமலஹாசன் தேவையில்லாமல் சினிமா வசனம் போல இங்கு பேசியுள்ளார். ஒரு பரபரப்பை உண்டாக்குவதற்காக அவர் பேசியிருக்கிறார். கமல் விஸ்வரூபம் என்ற ஒரு படம் எடுத்தார். பின்னர் அந்த படம் பெரிதாக விஸ்வரூபம் எடுத்து நாட்டை விட்டே போய் விடுவேன் என கமலஹாசன் தெரிவித்தார்.

இஸ்லாமியர்களுக்கு எதிராக படம் எடுத்ததாக சந்தேகம் வந்ததால், அந்த படத்தை விளக்க வேண்டியது படத் தயாரிப்பாளர்களின் கடமை. நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதற்காக அதனை சரி செய்ய ஜெயலலிதா கூறினார். இதனால் ஜெயலலிதா மீது அவருக்கு கோபம்.

எந்த மதத்தையும் புண்படுத்தி பேச வேண்டிய அவசியம் என்ன? இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என மதம் பற்றி எதுக்கு பேசவேண்டும். யாரோ ஒருத்தர் கொலைகாரர் என்றால் அதற்காக மதத்தை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? கோட்சே காந்தியை சுட்டுக் கொன்றதை யாருமே எற்றுக் கொள்ளமாட்டோம். அவர் என்ன மதம் என்று பார்த்துக் கொண்டிருப்போமா?

இந்திராகாந்தியை ஒரு சீக்கியர் கொன்றார். ஆனால் மன்மோகன்சிங்கை பிரதமராக்கினார் சோனியாகாந்தி. கோட்சே எந்த மதம் என்றே நமக்கு தெரியவில்லை. அந்த பெயர் ரஷ்யன் பெயர் போல உள்ளது. அந்த கோட்சேவை இந்து பயங்கரவாதி என பேசியிருக்கிறார். இது தேவையா? காந்தியடிகளை கோட்சே துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதில் மதம் எங்கிருந்து வந்தது.

தமிழக அரசு சினிமாவை போல ஏதோ செய்துவிடும் என அவரே (கமலஹாசன்) பிரசாரத்தை ரத்து செய்து விட்டு சென்றார். கமலஹாசனின் நாக்கை வெட்டுவேன் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசி உள்ளார். இது தவறில்லையா?

துரோகத்தை பற்றி நான் பேசினால் வழக்கு போடுவோம் என்கின்றனர். நீங்கள் எத்தனை வழக்குகள் போட்டாலும் பார்த்துக்கொள்ளலாம். வருகிற 23-ந்தேதிக்கு பின்னர் நீங்கள் வழக்குபோட இருக்கிறீர்களா? என்று பார்ப்போம். உங்கள் மீதும் வழக்குவராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

நம்மகூட இருந்து ஓடிப் போன செந்தில் பாலாஜி என்னை அரவக்குறிச்சிக்கு அழைத்து வந்து மக்களுக்காக உண்ணாவிரம் இருக்க வைத்தார். இப்போது பா.ஜ.க.வின் சி. டீம் என அவர் பேசுகிறார். அவருக்கு இந்த தேர்தலில் தக்க பாடத்தினை புகட்ட வேண்டும். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டு பா.ஜ.க., சந்திரசேகரராவுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க.வுடன் தி.மு.க. பேசிய உண்மையை தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்து விட்டார்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News