செய்திகள்

ஆலங்குடியில் தொழிற்பயிற்சி நிலைய மாணவி தற்கொலை - மற்றொரு மாணவிக்கு தீவிர சிகிச்சை

Published On 2019-05-14 18:01 IST   |   Update On 2019-05-14 18:01:00 IST
ஆலங்குடியில் தொழிற்பயிற்சி நிலைய மாணவிகள் 2 பேர் ஒரே நாளில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகினறனர்.
ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி இந்திராநகரை சேர்ந்தவர் பழனியப்பன். இவருடைய மகள் நதியா(வயது 19). இவர் ஆலங்குடியில் உள்ள ஒரு தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வந்தார். கடந்த 10-ந் தேதி எலி மருந்தை தின்று விட்டு வீட்டில மயங்கி கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் நதியாவை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று நதியா இறந்தார்.

இதே போல் அதேதொழிற் பயிற்சி நிலையத்தில் படித்து வந்த கரும்பிரான்கோட்டையை சேர்ந்த கருப்பையா என்பவரின் மகள் சண்முக பிரியா (18) என்பவரும் கடந்த 10-ந் தேதி எலி மருந்தை தின்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து நதியாவின் தந்தை பழனியப்பன், தனது மகள் வயிற்றுவலி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக ஆலங்குடி போலீசில் புகார் தெரிவித்தார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், நதியாவும், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவியும் தோழிகள் என்பதும், இவர்கள் 2 பேரும் செல்போனில் நீண்ட நேரமாக பேசி வந்ததும் தெரிய வந்தது. இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த சம்பவத்திற்கு காதல் விவகாரம் காரணமா? 2 மாணவிகளும் ஒரே நாளில் ஏன் வி‌ஷமருந்தை சாப்பிட்டார்கள்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News