செய்திகள்

8 வழிச்சாலை திட்டத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

Published On 2019-04-09 15:32 IST   |   Update On 2019-04-09 15:32:00 IST
8 வழிச்சாலை திட்டத்தின் தீர்ப்பை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்யும் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார். #ministerrajendrabalaji #admk #mkstalin #salemtochennai8wayroad

ஸ்ரீவில்லிபுத்தூர்:

தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி ஸ்ரீவில்லிபுத்தூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம்-சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டத்துக்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இது அரசுக்கு பின்னடைவு கிடையாது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்யும்.

தொழில் துறை வளர்ச்சிக்கு சாலை வசதி மிகவும் அவசியம். எனவே அடுத்த கட்டமாக கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து பேசி யாரும் பாதிக்காத அளவுக்கு முதல்-அமைச்சர் முடிவு எடுப்பார்.

கருத்து கணிப்பை தாண்டி மக்களின் கணிப்பு அ.தி.மு.க. தான். டெல்லியில் மோடி பிரதமராக வர வேண்டும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல, வி‌ஷ வாயு என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். எடப்பாடியை எதிர்க்கும் அரசியல் இயக்கம் டெட்பாடி ஆகி விடும்.

எழுதிக் கொடுத்த பேப்பரை பார்த்து தான் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் படிக்கிறார். சட்டசபையிலும் எழுதி வைத்து தான்பேசுவார்.

கலைஞரிடம் இருந்த திறமை மு.க.ஸ்டாலினிடம் இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தலைவர் ஆகி விட்டார்.

மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் டி.டி.வி. தினகரனுக்கு துளியும் இல்லை. அவர் பணம், பணம் என்று தான் உள்ளார். அவரிடம் மனம் இல்லை, குணம் இல்லை.

ஸ்டாலின் ஒரு இடத்தில் மட்டும் கூட்டத்தை நடத்தி கூட்டம் கூட்டுகிறார். பல்வேறு இடங்களுக்குச் சென்று முதல்-அமைச்சரை போல் திறந்த வேனில் ஸ்டாலின் பிரசாரம் செய்வாரா?

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நன்றாக இருப்பதால் தான் மு.க.ஸ்டாலின் டி-சர்ட் போட்டு நடந்து சென்று ஓட்டு கேட்கிறார். தி.மு.க. ஆட்சி போல் சட்டம், ஒழுங்கு இருந்தால் அவரால் நடக்க முடியுமா?

ஸ்டாலின் பேச்சில் வன்மம் உள்ளது. சண்டையை தூண்டி விடுகிறார். எப்படியாவது ஆட்சியை பிடித்து விடலாம் என்று ஏக்க பெருமூச்சு விடுகிறார். இது நடக்கவே நடக்காது.

40 பாராளுமன்ற தொகுதிகளிலும் 18 சட்டசபை இடைத் தேர்தலிலும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் தான் வெற்றி பெறும்.

மேற்கண்டவாறு அவர் கூறினார். #ministerrajendrabalaji #admk #mkstalin #salemtochennai8wayroad

Tags:    

Similar News