செய்திகள்

இந்த தேர்தலோடு தி.மு.க. காணாமல் போய் விடும்- டாக்டர் ராமதாஸ் பேச்சு

Published On 2019-04-06 14:55 GMT   |   Update On 2019-04-06 14:55 GMT
இந்த தேர்தலோடு தி.மு.க. காணாமல் போய் விடும் என்று பென்னாகரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியுள்ளார். #ramadoss #pmk #mkstalin #parliamentelection

தருமபுரி:

தர்மபுரி எம்.பி. தொகுதி பா.ம.க. வேட்பாளர் டாக்டர். அன்புமணி ராமதாசை ஆதரித்து பென்னாகரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

300 இடங்களில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைக்கும். பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் தி.மு.க. என்ற கட்சியை பெண்கள் இல்லாமல் ஆக்க வேண்டும்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை பற்றி அவதூறாக பேசி வருகிறார். நான் வன்னியர்களுக்கு எதும் செய்யவில்லை என்று கூறி வருகிறார். ஒவ்வொரு கிராமத்திலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஏழை மாணவர்கள் டாக்டர்களாக உருவாகி வருகிறார்கள். அதற்கு நான் தான் காரணம். இட ஓதுக்கீடு பெற்று தந்ததால் தான் ஏழை மாணவர்களும் இன்று டாக்டருக்கு படிக்கிறார்கள். என்னை போய் எதும் செய்யவில்லை என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் நாங்கள் கூட்டணி சேருவோம் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் கூட்டணி சேராததால் மு.க.ஸ்டாலின் கோபத்தில் ஏதோ, ஏதோ பேசி வருகிறார். என்னை அவதூறாக பேசி வரும் மு.க.ஸ்டாலினுக்கு தேர்தலில் தோல்வி பயம் வந்து வந்துவிட்டது. அதனால் தான் அவர் அப்படி பேசி வருகிறார்.

தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை, காவிரி உபரிநீர் தர்மபுரி மாவட்ட ஏரிகளுக்கு கொண்டு வரும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அ.தி.மு.க. அரசு நிச்சயம் கொண்டு வரும்.

தமிழக அரசு மீது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கொஞ்சம் கோபத்தில் உள்ளனர். அவர்களின் கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்ற நான் உறுதி கூறுகிறேன். எனவே அனைவரும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் டாக்டர் அன்புமணி ராமதாசை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஓசூர் ராம்நகர் அண்ணாசிலை அருகே தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் இன்று தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கு உகாதி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

மத்தியில் பா.ஜனதா கூட்டணி அதிக இடங்கள் கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும். பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கூட்டணி வெற்றி கூட்டணி ஆகும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வரம்பு மீறி பேசி வருகிறார். இந்த தேர்தலோடு தி.மு.க. காணாமல் போய் விடும்.

இவ்வாறு அவர் கூட்டத்தில் பேசினார். #ramadoss #pmk #mkstalin #parliamentelection

Tags:    

Similar News