செய்திகள்

தேர்தல் பிரசாரத்தில் பொன்னாடை, பூங்கொத்து வேண்டாம்- கட்சி தொண்டர்களுக்கு தினகரன் வேண்டுகோள்

Published On 2019-03-29 05:45 GMT   |   Update On 2019-03-29 05:45 GMT
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பொன்னாடை, பூங்கொத்து வேண்டாம் என்று கட்சி தொண்டர்களுக்கு டி.டி.வி.தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். #LokSabhaElections2019 #AMMK #TTVDhinakaran
சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

ஜனநாயக நாட்டில் மிகச்சாதாரணமாக மற்றவர்களுக்கு கிடைக்கிற உரிமைகளைக் கூட நாம் உச்சநீதிமன்றம் வரை சென்றுதான் பெற வேண்டிய நிலையை துரோகிகளும், தமிழ்நாட்டின் எதிரிகளும் உருவாக்கி இருக்கிறார்கள். இவ்வளவுக்கு பிறகும் நம்மை எப்படியாவது வீழ்த்திட வேண்டுமென கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக எந்த எல்லைக்கும் போவதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

பிரசாரத்திற்கும், நம்முடைய புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் மிகக்குறைந்த கால அளவே இருக்கிறது. இப்போது நமக்கு ஒவ்வொரு மணித்துளிகளும் முக்கியம். நொடிப்பொழுதைக் கூட வீணடிக்காமல் தேர்தல் களத்தில் மட்டுமே கவனத்தை வைக்க வேண்டிய நேரம் இது. அதற்காக உங்களின் அன்பான முகங்களைத் தரிசிப்பதற்காகவும், மக்களைச் சந்தித்து நம்முடைய வரலாற்று வெற்றியை உறுதிப்படுத்துவதற்காகவும் மீண்டும் ஒரு முறை புறப்பட்டிருக்கிறேன்.

இந்த பிரச்சார பயணத்தின் போது பட்டாசு வெடிப்பதில், பொன்னாடைகள், பூங்கொத்துகள் கொடுப்பதில், புகைப்படம் எடுப்பதில் பொன்னைவிட மேலான நம்முடைய நேரத்தை நாமே விரயமாக்கிடக்கூடாது.

மேலும் தேர்தல் பிரசார பயணத்தில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் தோரணக் கொடிகளை முற்றிலுமாக தவிர்த்திடுங்கள். இதைப் போலவே நூற்றுக்கணக்கான வாகனங்களில் என்னைப் பின்தொடர்ந்து வரும் தங்களின் ஆர்வம் புரிகிறது.

ஆனால் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி மக்களுக்கு இடையூறு செய்யக்கூடாதல்லவா? அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு நம்மால் எந்தத் தொல்லையும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள். இன்னொரு பக்கம் பட்டாசுகள், வாகனங்கள் போன்றவற்றை நம்முடைய வேட்பாளர்களின் செலவுக்கணக்கில் சேர்த்துவிடுவார்கள் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

40 பாராளுமன்றத் தொகுதிகள், 19 சட்டப் பேரவைத் தொகுதிகள் ஆகியவற்றை மொத்தமாக வென்றெடுப்பதில் மட்டுமே உங்கள் ஒவ்வொருவரின் முழுக்கவனமும் இருக்க வேண்டும்.

நம்மை வீழ்த்தத் துடிக்கும் எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் மத்தியில் நம்முடைய ஒவ்வொரு மணித் துளியும் அந்த வெற்றிக்கு முக்கியம். உலகமே போற்றும் வெற்றியை நமதாக்கிடுவோம். நாம் புரட்சித்தலைவி அம்மாவின் பிள்ளைகள் என நாட்டுக்கு உரக்கச் சொல்லிடுவோம்.

இவ்வாறு தினகரன் கூறியுள்ளார்.  #LokSabhaElections2019 #AMMK #TTVDhinakaran
Tags:    

Similar News