செய்திகள்

நெட்டப்பாக்கம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை குழவி கல்லால் தாக்கிய கணவன் கைது

Published On 2019-03-22 13:12 GMT   |   Update On 2019-03-22 13:12 GMT
நெட்டப்பாக்கம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை குழவி கல்லால் தாக்கிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
சேதராப்பட்டு:

நெட்டப்பாக்கம் அருகே சூரமங்கலம் காலனி புதுநகரை சேர்ந்தவர் ராஜ்கிரண் (வயது 30). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கஸ்தூரி (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். கஸ்தூரி திருவாண்டார் கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதற்கிடையே கஸ்தூரியின் நடத்தையில் ராஜ்கிரண் சந்தேகம் அடைந்தார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 

அதுபோல் நேற்றும் இது தொடர்பாக அவர்களுக் கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜ்கிரண் வீட்டில் இஞ்சி, பூண்டு இடிக்க பயன்படுத்தும் குழவி கல்லை எடுத்து கஸ்தூரியின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்து ரத்தம் பீறிட்டு கஸ்தூரி மயங்கி விழுந்தார். உடனடியாக கஸ்தூரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு  ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விமல்குமார் வழக்குபதிவு செய்து ராஜ்கிரனை கைது செய்தார்.
Tags:    

Similar News