திருச்சி அருகே மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொன்ற கணவர்
மண்ணச்சநல்லூர்:
திருச்சி மாவட்டம் வடக்குஈச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசந்தர் (வயது 40). இவரது மனைவி மகாலட்சுமி (36) . இவர்களுக்கு 2மகன்கள் உள்ளனர். பாலசந்தர் சிங்கப்பூரில் பணியாற்றி வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார்.
சிங்கப்பூரில் பணியாற்றி வந்த போது, பாலசந்தர் அவரது மனைவிக்கு பணம் அனுப்பியுள்ளார். ஊருக்கு திரும்பியதும் அந்த பணத்தை எங்கே என்று மனைவியிடம் கேட்டுள்ளார். அவர் 2 மகன்களின் கல்விக்கு செலவு செய்து விட்டதாக கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்றிரவும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாலசந்தர், இன்று அதிகாலை தூங்கி கொண்டிருந்த மகாலட்சுமியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார். பின்னர் மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையம் சென்று சரணடைந்தார்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மகாலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மகாலட்சுமியின் நடத்தையில் பாலசந்தர் சந்தேகப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினையில் கொலை செய்தாரா? என்றும் பாலசந்தரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.