செய்திகள்

சென்னை விமானத்தில் ரூ.46 லட்சம் தங்கம் கடத்தல்

Published On 2019-03-14 09:35 GMT   |   Update On 2019-03-14 09:35 GMT
சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.46 லட்சம் மதிப்பிலான 1.4 கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:

அகமதாபாத்தில் இருந்து சென்னைக்கு இன்று காலை உள்நாட்டு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

சென்னை பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரது கைப்பையை சோதனையிட்டனர்.

அப்போது அதில் 1.4 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ.46 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். அவரிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது பல்வேறு தகவல்கள் தெரிய வந்தது.

அந்த விமானம் ஏற்கனவே இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த பன்னாட்டு விமானம் ஆகும்.

அதில் இலங்கையில் இருந்து வந்த பயணி தனது இருக்கைக்கு அடியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்துள்ளார். பின்னர் அந்த விமானம் சென்னையில் இருந்து அகமதாபாத்துக்கு உள்நாட்டு விமானமாக சென்றது.

பின்னர் அங்கிருந்து உள்நாட்டு விமானமாக சென்னை வந்தது. அதே இருக்கையை முன்பதிவு செய்த அந்த பயணி சென்னை விமானத்தில் தங்க கட்டிகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்த போது சிக்கினார்.

அவரிடம் விசாரித்த போது, “பன்னாட்டு விமானங்களில் சோதனை கெடுபிடி அதிகம் இருக்கும். உள்நாட்டு விமானங்களில் கெடுபிடி அதிகம் இருக்காது. எனவே இலங்கையில் இருந்து தங்கத்தை கடத்தி வந்து பின்னர் அது உள்நாட்டு விமானமாக மாற்றப்படும் வரை காத்திருந்து தங்கத்தை கடத்தினோம்” என்றார். இலங்கையில் இருந்து கடத்தி வந்தது யார் என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News